விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2024
- சனவரி
சிட்டுக்குருவி என்பது சிட்டுக்குருவிக் குடும்பமான பேஸ்ஸரிடேவில் உள்ள ஒரு பறவை ஆகும். இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. சிட்டுக்குருவி ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன் நீளம் 16 செ.மீ.ம், எடை 24-39.5 கிராமும் இருக்கும். பெண் சிட்டுக்குருவிகள் மற்றும் குஞ்சுகள் வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், மற்றும் ஆண் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு, வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும். பேஸ்ஸர் பேரினத்தில் உள்ள 25 இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் பூர்வீகம் பெரும்பகுதி ஐரோப்பா, மத்தியதரைக்கடல் பகுதிகள் மற்றும் பெரும்பகுதி ஆசியா ஆகும். மேலும்...
எசுபார்த்தாவின் மேலாதிக்கம் என்பது எசுபார்த்தா அரசு கிரேக்க பழங்காலத்தின் மிகப்பெரிய இராணுவ நில சக்தியாக இருந்ததைக் குறிக்கும். பாரம்பரியக் காலத்தில், எசுபார்த்தா முழு பெலொப்பொனேசியா மீதும் ஆதிக்கம் செலுத்தியது அல்லது செல்வாக்கு செலுத்தியது. கூடுதலாக, கிமு 431-404 இல் நடந்த பெலோபொன்னேசியப் போரில் ஏதெனியர் மற்றும் டெலியன் கூட்டணியின் தோல்வியின் விளைவாக கிமு 404 முதல் கிமு 371 வரை தெற்கு கிரேக்க உலகில் குறுகிய காலம் எசுபார்த்தன் ஒற்றை ஆதிக்கம் இருந்தது. மேலும்...
- பெப்பிரவரி
சித்தோர்கார் முற்றுகை 1303 ஆம் ஆண்டில், தில்லி சுல்தானக ஆட்சியாளர் அலாவுதீன் கில்சி, குகிலா மன்னர் இரத்னசிம்காவிடமிருந்து சித்தோர்கார் கோட்டையை எட்டு மாத கால முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். படையெடுப்பாளர்களின் முன்புறத் தாக்குதல்கள் இரண்டு முறை தோல்வியடைந்தது. மழைக்காலத்தின் இரண்டு மாதங்களில், படையெடுப்பாளர்கள் மலையின் இடைப் பகுதியை அடைய முடிந்தது, ஆனால் மேலும் முன்னேற முடியவில்லை என்று கூறுகிறார். அலாவுதீன் கோட்டையை முற்றுகையிடும் சாதனங்களில் இருந்து கற்களை எறியுமாறு கட்டளையிட்டார். அதே நேரத்தில் அவரது கவச வீரர்கள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அதைத் தாக்கினர். மேலும்...
குயுக் கான் என்பவர் மங்கோலியப் பேரரசின் மூன்றாவது ககான் ஆவார். இவர் ஒக்தாயி கானின் மூத்த மகனும், செங்கிஸ் கானின் பேரனும் ஆவார். இவர் 1246 முதல் 1248 வரை ஆட்சி செய்தார். மங்கோலியத் தலைநகரான கரகோரத்திற்கு அருகில் 24 ஆகத்து 1246ஆம் ஆண்டு குயுக் முடிசூட்டிக் கொண்டார். இவ்விழாவில் பெருமளவிலான அயல்நாட்டுத் தூதுவர்கள் கலந்துகொண்டனர். மங்கோலிய சக்தியை ஐரோப்பாவிற்கு எதிராகத் திருப்பி விட குயுக் விரும்பினார். ஆனால் இவரது எதிர்பாராத மரணமானது மேலும் மேற்கு நோக்கி ஐரோப்பாவுக்குள் மங்கோலியப் படைகள் நகரும் முயற்சியைத் தடுத்தது. மேலும்...
- மார்ச்சு
சிந்துவெளி நாகரிகம் என்பது தெற்காசியாவின் வடமேற்கு பகுதிகளில் இருந்த ஒரு வெண்கலக் கால நாகரிகம் ஆகும். இது பொ. ஊ. மு. 3300 முதல் பொ. ஊ. மு. 1300 வரை நீடித்திருந்தது. இது அதன் முதிர்ச்சியடைந்த கட்டத்தை பொ. ஊ. மு. 2600 முதல் பொ. ஊ. மு. 1900 வரை கொண்டிருந்தது. பண்டைய எகிப்து மற்றும் மெசொப்பொத்தேமியாவுடன் அண்மைக் கிழக்கு மற்றும் தெற்காசியாவின் மூன்று தொடக்க கால நாகரிகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மூன்றில் இதுவே பரந்த நிலப்பரப்பை கொண்டிருந்தது. மேலும்...
எசுபார்த்தாவின் லைகர்கசு என்பவர் தெல்பியில் உள்ள அப்பல்லோ கோயில் பூசாரியின் அனுமதிக்கு இணங்க எசுபார்தா சமுதாயத்தின் இராணுவம் சார்ந்த சீர்திருத்தத்தை நிறுவிய எசுபார்த்தாவின் அரை-தொன்ம சட்டமியற்றியவர் ஆவார். இவரது அனைத்து சீர்திருத்தங்களும் மூன்று எசுபார்த்தன் நற்பண்புகளை ஊக்குவித்தன. இவர் பண்டைய வரலாற்றாசிரியர்கள் மற்றும் தத்துவவாதிகளான எரோடோட்டசு, செனபோன், பிளேட்டோ, பாலிபியசு, புளூட்டாக், எபிக்டெட்டசு ஆகியோரால் குறிப்பிடப்படுகிறார்.மேலும்...
கருங்கழுகு என்பது ஒரு வகைக் கழுகு இனப் பறவை ஆகும். எல்லா கழுகுகளையும் போலவே, இது பாறுக் குடும்பத்தில் உள்ளது, மேலும் இது இக்டினேட்டஸ் பேரினத்தின் ஒரே உறுப்பினர் ஆகும். இப்பறவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தெற்கு மற்றும் தென்கிழக்காசியா மற்றும் தென்கிழக்கு சீனாவின் மலைப்பாங்கான பகுதிகளின் காடுகளில் காணப்படுகிறது. இப்பறவையின் உடல் பார்க்க கறுப்பாகவும், அலகு மஞ்சளாகவும் இருக்கும். இவை எப்போதும் அடர்ந்த பசுமையான காடுகளிலேயே சார்ந்து வாழும். மேலும்...
மொடு சன்யூ என்பவர் சியோங்னு பேரரசைத் தோற்றுவித்தவர் ஆவார். இவரது தந்தை தோவுமன் ஆவார். சிமா சியானின் கூற்றுப்படி மொடு ஒரு அறிவாற்றல் மிகுந்த குழந்தையாக இருந்தார். இவர் கி. மு. 209ஆம் ஆண்டு தன் தந்தையைக் கொல்லுமாறுத் தன் ஆட்களுக்கு ஆணையிட்டு ஆட்சிக்கு வந்தார். மொடு கி. மு. 209 முதல் கி. மு. 174 வரை ஆட்சி செய்தார். இவர் இவரது தந்தை தோவுமனுக்குக் கீழ் ஒரு இராணுவத் தலைவராகப் பணியாற்றினார். பிறகு சியோங்னு பேரரசின் சன்யூவாக முடிசூட்டிக் கொண்டார். இவரது பேரரசு தற்போதைய மங்கோலியாவில் அமைந்திருந்தது.மேலும்...
- மே
கோட்டைக் கொச்சி என்பது இந்தியாவின், கேரளத்தின், கொச்சி (கொச்சி) நகரத்தின் சுற்றுப்புறமாகும். கோட்டைக் கொச்சி என்ற பெயர் இமானுவேல் கோட்டை என்பதில் இருந்து வந்தது. போர்த்துகேய பேரரசின் கட்டுப்பாட்டுக்கு இந்திய மண்ணில் முதன் முதலில் வந்த ஐரோப்பியருக்கான முதல் கோட்டை இதுவாகும். இது கொச்சியின் முதன்மை நிலப்பரப்பின் தென்மேற்கில் உள்ள ஒரு சில தீவுகள் கொண்ட ஒரு பகுதியாகும். மேலும் இது ஒட்டுமொத்தமாக பழைய கொச்சி அல்லது மேற்கு கொச்சி என அழைக்கப்படுகிறது. இதை ஒட்டி மட்டாஞ்சேரி பகுதி உள்ளது. மேலும்...
முகியல்தீன் முகம்மது என்பவர் ஆறாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் பொதுவாக ஔரங்கசீப் என்ற பெயராலும் அறியப்படுகிறார். இவர் 1658 முதல் 1707ஆம் ஆண்டில் இவர் இறக்கும் வரை ஆட்சி புரிந்தார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் முகலாயப் பேரரசானது அதன் அதிகபட்ச பரப்பளவை அடைந்தது. முகலாயப் பேரரசின் நிலப்பரப்பானது கிட்டத்தட்ட இந்தியத் துணைக் கண்டத்தின் ஒட்டு மொத்த பரப்பளவையும் கொண்டிருந்தது. ஔரங்கசீப்பும், முகலாயர்களும் தைமூரிய அரசமரபின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாவர். மேலும்...
- சூன்
யூக்ளிடு-ஆய்லர் தேற்றம் என்பது கணிதத்தின் எண்கோட்பாட்டில் செவ்விய எண்களை மெர்சென் பகாத்தனிகளுடன் தொடர்புபடுத்தும் ஒரு தேற்றமாகும். ஓர் இரட்டையெண்ணானது 2p−1(2p − 1) (இதில், 2p − 1 ஒரு பகா எண்) என்ற வடிவில் "இருந்தால், இருந்தால் மட்டுமே", அந்த இரட்டையெண் ஒரு செவ்விய எண்ணாக இருக்கமுடியும் என இத்தேற்றம் கூறுகிறது. இத்தேற்றத்தில் "இருந்தால்", "இருந்தால் மட்டுமே" எனும் இரு பகுதிகளை முறையே நிறுவிய யூக்ளிடு, ஆய்லர் கணிதவியலாளர்களின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. மேலும்...
இளைய சைரஸ் என்பவர் அகாமனிசிய இளவரசர் மற்றும் தளபதி ஆவார். இவர் கிமு 408 முதல் 401 வரை லிடியா மற்றும் ஐயோனியாவின் ஆளுநராக இருந்து ஆட்சி செய்தார். இவர் இரண்டாம் டேரியஸ் மற்றும் பாரிசாடிஸ் ஆகியோரின் மகனாவார். இவர் கிமு 401 இல் பாரசீக அரியாசத்திலிருந்து தன் அண்ணனான இரண்டாம் அர்த்தசெராக்சை அகற்றி அதில் தான் அமர குனக்சா சமரில் ஈடுபட்டு இறந்தார். சைரசின் வரலாறு குறித்து செனபோன் தனது அனபாசிஸ் என்ற நூலில் கூறியுள்ளார். மேலும்...
- சூலை
ஸ்ப்பாக்ட்டீரியா சமர் என்பது பெலோபொன்னேசியன் போரின்போது நடந்த ஒரு தரைச் சமராகும். இது கிமு 425 இல் ஏதென்சுக்கும் எசுபார்த்தாவிற்கும் இடையில் நடந்தது. பைலோஸ் சமர் மற்றும் அடுத்தடுத்த அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பல எசுபார்த்தன்கள் ஸ்ப்பாக்ட்டீரியா தீவில் சிக்கித் தவித்தனர். கிளியோன் மற்றும் டெமோஸ்தீனசின் தலைமையிலான ஏதெனியன் படை தீவை சுற்றிவளைத்து அவர்களை சரணடைய கட்டாயப்படுத்தியது. மேலும்...
அலாவுதீன் கில்சி என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தில் தில்லி சுல்தானகத்தை ஆண்ட கல்சி அரசமரபைச் சேர்ந்த ஓர் ஆட்சியாளர் ஆவார். இவரது இயற்பெயர் அலி குர்ஷஸ்ப் ஆகும். வருவாய், விலைவாசி கட்டுப்பாடுகள் மற்றும் சமூகம் தொடர்பான, முக்கியமான ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நிர்வாக சீர்திருத்தங்களை அலாவுதீன் தொடங்கி வைத்தார். இந்தியா மீதான பல மங்கோலிய படையெடுப்புகளிலிருந்தும் வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டார். மேலும்...
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.