முல்லை வகை
முல்லை என்னும் சொல் முல்லைப்பூ, முல்லைநிலம், அகத்திணையில் முல்லைத்திணை, புறத்திணையில் முல்லைத்துறை முதலானவற்றைக் குறிக்கும்.
சொல்லும் பொருளும்
[தொகு]முல்லைப் பூ
- முல்லைப் பூக்களின் வகைகளைப் படத்துடன் காண்க.
முல்லைநிலம்
- முல்லைப்பூ பூக்குமிடம் காடு. முல்லை பூக்கும் நிலத்தை முல்லை என்றனர். [1]
முல்லை அகத்திணை உரிப்பொருள்
[தொகு]- முல்லை நிலத்து மக்களுக்கு ஆனிரை மேய்த்தல் தொழில். அடுத்த நாட்டு ஆடுமாடுகளைக் கவர்ந்து செல்வதும், போரிட்டு மீட்பதும் இந்த நிலத்தில் நிகழும். மேய்க்கும் காலத்திலும், போரிடும் காலங்களிலும் மனைவி கணவனைப் பிரிந்திருக்க வேண்டிவரும். .இந்தப் பிரிவைத் தாங்கிக்கொண்டிருத்தலை ‘இருத்தல்’ என்றனர். இருத்தலோடு தொடர்புடைய நிகழ்வுகளை ‘இருத்தல் நிமித்தம்’ என்றனர்
- மருதநிலத்து வேந்தன் போருக்காகப் பிரிவது பாலை. நெய்தல் நிலத்து ஆண்நுளையர் கடலில் மீனுக்காகப் பிரிவது நெய்தல். நானிலத்து மக்கள் பொருளுக்காகவும், போருக்காகவும், தூது சொல்லவும், கல்விக்காகவும் பிரிதல் பாலை. இந்தப் பிரிவுகளை மகளிர் தாங்கிக்கொண்டிருத்தலை முல்லைத்திணை எனக் கொள்ளும் மரபு இல்லை.
முல்லை புறத்திணைத் துறையில் விரிபொருள்
[தொகு]- மூதின்முல்லை என்னும்போது குடும்பத்தில் முதிர்ந்த இல்லத்தரசி விருந்தோம்பி, வீரனாக மகனை வளர்க்கும் திறம் கூறப்படும். [2]
- வல்லாண்முல்லை என்னும்போது குடும்பத்தில் வாழும் வீரன் ஒருவன் தன் உடைமைகளை ஏற்போருக்கு வழங்கி மகிழும் வள்ளண்மைத் திறம் கூறப்படும். [3]
முல்லைப்பூ வகை
[தொகு]குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் முல்லை (நன்முல்லை), கல் இவர் முல்லை, குல்லை, தளவம், நந்தி, பிடவம், மௌவல் ஆகிய மலர் வகைகள் இடம்பெற்றுள்ளன.
முல்லை
- முல்லை என்னும் சொல்லே காட்டில் மலரும் வனமுல்லையைத்தான் குறிக்கும். பாரி வள்ளல் தன் தேரை வழங்கியது இந்த முல்லைக்குத்தான். இதற்குக் காய்கள் உண்டு. (படம்)
முல்லை - நன்முல்லை
- அள்ளூர் நன்முல்லையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இக்காலத்தில் மகளிர் தலையில் சூடிக்கொள்ளும் முல்லை இந்த நன்முல்லை ஆகும். இதனைச் சூடிக்கொண்ட புலவர் நன்முல்லையார். இவரது பாடல்களில் 11 சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. (நன்முல்லை - படம்)
முல்லை நாள்முல்லை என்னும் நித்தியமுல்லை
- இதற்குப் பருவகாலம் இல்லை. நாள்தோறும் பூக்கும். (படம்)
முல்லை தளவம் என்னும் செம்முல்லை சாதிமல்லி
- இதன் புறவிதழின் வெளிப்பக்கம் சிவப்பாக இருக்கும். (படம்)
முல்லை அடுக்குமல்லி
- இந்த மல்லிகையில் ஒரே பூவில் (தாமரை போல்) பல அடுக்குகள் இருக்கும். (படம்)
குல்லை என்னும் குட்டிப்பிலாத்தி
- கார் காலத்தில் முதல் மழை பெய்த நாளில் அரும்பு விட்டு புதர் புதராகப் பூத்துக் குலுங்கும். [4]
பிடவம்
- பிடவம் பூத்துக் குலுங்கும் ஊர் பிடவூர். பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் மாண்டபோது அவ்வூரில் பூத்திருந்த பூக்களை யாரும் சூடிக்கொள்ளவில்லை. துக்கம் கொண்டு ஆடும் நாளில் முல்லையே! ஏன் பூக்கிறாய் எனப் புலவர் பாடுகிறார். [5]
மௌவல்
- மரமல்லி நள்ளிருளில் பூத்து நாறும்(மணக்கும்). இதனை மௌவல் என்பர். [6]
நள்ளிருள்-நாறி [7]
நந்தி
- நந்தியாவிட்டை என இக்காலத்தில் வழங்கப்படும் நந்திப் பூவில் இரண்டு வகை உண்டு. இதில் ஒரே ஒரு அடுக்கு கொண்டது ஒருவகை. ஒன்றுக்குள் ஒன்றாகப் பல அடுக்குகள் கொண்டது அடுக்கு நந்தியாவிட்டை. [8]
நிகண்டு விளக்கம்
[தொகு]- தளவு, மாகதி, மௌவல், யூதிகை என்னும் பெயர்கள் முல்லைப் பூவுக்கு உண்டு [9]
அடிக்குறிப்பு
[தொகு]அ வரிசை | ||
---|---|---|
க வரிசை | ||
ச வரிசை | ||
ஞ வரிசை | ||
த வரிசை | ||
ந வரிசை | ||
ப வரிசை | ||
ம வரிசை | ||
வ வரிசை | ||
குறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.