செய்யாறு (ஆறு)
செய்யாறு ஆறு Cheyyar River | |
---|---|
அமைவு | |
அமைவிடம் | தமிழ்நாடு, தென்னிந்தியா |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | பாலாறு |
செய்யாறு ஆறு, தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம் வழியாகப் பாயும் ஒரு பருவ கால ஆறு ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை பகுதியில் உருவாகும் இந்த ஆறு, பாலாறு நதியின் துணை ஆறு ஆகும்.
ஜவ்வாது மலைத்தொடரின் நசமலையில் தோன்றி, மேற்குத் தெற்காகப் பாய்ந்து, பின்பு செங்கம் அருகில், வடகிழக்காகத் திரும்பி, திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் பாய்கிறது. ஜவ்வாது மலையிலிருந்து கிழக்காகப் பாயும் பீம ஆறு (பீமன் அருவியிலிருந்து உருவாவது), மிருகண்ட நதி (மிருகண்ட அணையிலிருந்து வருவது) ஆகிய துணை ஆறுகள், போளூர் நகருக்கு அருகிலுள்ள சோழவரம் எனும் ஊரில் செய்யாறு உடன் இணைகின்றன. ஜவ்வாது மலையின் அடிவாரத்திலுள்ள செண்பகத்தோப்பு அணையிலிருந்து உருவாகும் கமண்டல நதி எனும் துணை ஆறும் அமிர்தி அருகில் வரும் நாகநதி ஆறும், ஆரணி அருகே உள்ள சம்புவயாயநல்லூர் கிராமத்தில் ஒன்று இணைந்து, கமண்டல நாக நதி என உருப்பெற்று ஆரணி நகரின் வழியாக சென்று வாழைப்பந்தல் எனுமிடத்தில் செய்யாற்றுடன் இணைகிறது. இங்கிருந்து சுமார் அரை கி.மீ அகலத்தில் செய்யாறு ஆறாக வடக்குக் கிழக்காக ஓடி, காஞ்சிபுரம் நகரை அடுத்த பழையசீவரம் எனும் ஊரில் பாலாறு நதிடன் இணைந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் ஓடும் செய்யாறு ஆறு மாவட்டத்தின் வேளாண் பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் முக்கிய ஆதாரமாகும். செய்யாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் கரைகளில், திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நகரங்களான செங்கம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, திருவத்திபுரம் மற்றும் வந்தவாசி ஆகிய நகரங்கள் அமைந்துள்ளன.
திருவத்திபுரம் நகரில் இந்த ஆற்றின் கரையில் திருஞானசம்பந்தர் நாயன்மாரால் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சேயாறு (சேய்+ஆறு) என்பது, காலப்போக்கில் திரிந்தும், 'செய்யாறு' எனப் பெயர் பெற்றதாகவும் தகவல்கள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.